சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை – நடிகர் ஆரி கவலை !

சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி கலந்து கொண்டனர். நடிகர் ஆரி பேசும்போது‘வீராபுரம் 220’ என்ற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும் போது தான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான். என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன். எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள்’ என்றார்.