அஜித்தை மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார்

அஜித்குமார் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் பாலியல் பிடியில் சிக்கி தப்பிக்க வழியில்லாமல் தவிக்கும் 3 இளம் பெண்களை பற்றிய கதை. அந்த பெண்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் வக்கீல் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து இருந்தார். அஜித்குமாரின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படம் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த படம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. வெளிநாடுகளிலும் அதிக வசூல் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் தனது வீட்டில் விசேஷமாக அமைக்கப்பட்டு உள்ள தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு அஜித்குமாரை போனில் தொடர்புகொண்டு பாராட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துள்ள படம் என்றும், இதில் நடிக்க ஒப்புக்கொண்டது பெருமைக்குரிய விஷயம் என்று மனதார வாழ்த்தியுள்ளார்.