இலங்கை குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பினார் !

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றபோது அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், கிங்க்ஸ் பெரி ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏராளமானோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இலங்கை சென்றிருந்த நடிகை ராதிகா சரத்குமார் சின்னமன் கிராண்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்துள்ளார். குண்டு வெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அங்கிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.