தன் மகனை இயக்குகிறார் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் !

பல்வேறு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர்பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களை இயக்கி உள்ளார். சிறிது இடைவெளிக்கு பிறகு தங்கர் பச்சான் மீண்டும் புதிய படம் இயக்குகிறார். இந்த படத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக மிலனா, அஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர். முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா, யோகிராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படம் குறித்து தங்கர் பச்சான் கூறும்போது, சென்னை நகரை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. எனது வழக்கமான படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் படமாக இருக்கும். காதல், அதிரடி சண்டைகள், நகைச்சுவை, பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறும். முனிஷ்காந்த் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வருகிறார் என்றார். படத்திற்கு இசை தரண்குமார். முழு படப்பிடிப்பும் சென்னையில் நடக்கிறது.