நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார் – தேர்தல் செயற்குழு கூட்டத்தில் நாசர் பேட்டி !

புதிய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். அந்த அவகாசமும் முடிந்துள்ளதால் தேர்தல் குறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் கடைசி செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், டி.பி.கஜேந்திரன், பூச்சி முருகன், ஸ்ரீமன், உதயா, ஹேமச்சந்திரன், ஜூனியர் பாலையா, அஜய்ரத்னம், ரமணா, குட்டி பத்மினி, லலிதாகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்பொழுது நாசர் கூறியது, எங்கள் நிர்வாகத்தின் பணிகள் மகிழ்ச்சியாகவும் சட்டரீதியாகவும் முடிந்து இருக்கிறது. நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு அவரது ஆலோசனையின் பேரில் தேதி அறிவிக்கப்படும். சட்ட ரீதியாக அதற்கான பணிகள் செய்யப்படும்.