நாகேஷ் திரையரங்கம் படத்துக்கு தடைகேட்டு வழக்கு

டிரான்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன், புனிதா ராஜன் தயாரித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். இஷாக் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படத்துக்கு தடைகேட்டு நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

“என்னுடைய தந்தை நாகேஷ் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். அவர் சென்னை டி.நகரில் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு தியேட்டரை கட்டி நடத்தினார். தற்போது அந்த தியேட்டரின் பெயரிலேயே நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்த பெயரை வைப்பதற்கு படத்தின் சார்பில் யாரும் எங்கள் குடும்பத்திடம் அனுமதி பெறவில்லை. “

எனது தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு பதில் அளிக்கும்படி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.