மிரட்டி யு சான்று பெற்ற எஸ்.வி.சேகர்

1982ம் ஆண்டு வெளிவந்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த விசு, எஸ்.வி.சேகர், சூரியகோஸ் ஆகியோர் அதே கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர அஸ்வின் சேகர், பூர்ணா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, ஷாம்ஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு தரண் இசை அமைத்துள்ளார், யாருடா மகேஷ் படத்தை இயக்கிய மதன்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படம் சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு சென்றது. எஸ்.வி.சேகரும் தணிக்கை குழு உறுப்பினர்தான் என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அவர் தணிக்கை குழு உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் சில இடங்களில் ஆபாச வசனம் இருக்கிறது , இளைஞர்கள் மனதை கெடுக்கும் சில காட்சிகள் இருக்கிறது அதனால் யுஏ தருகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு ஆத்திரமடைந்த எஸ்.வி.சேகர் எந்தெந்த காட்சிகள் என்று கேட்டிருக்கிறார்.
அவர்கள் காட்சிகளை சொல்ல சொல்ல இதேபோன்று அந்தப் படத்தில் ஒரு காட்சி இருந்ததே அதை எப்படி அனுமதித்து யு சான்றிதழ் கொடுத்தீர்கள் என்று கேட்டுவிட்டு “என் படத்திற்கு யுஏ கொடுத்தால் நான் ரிவைசிங் கமிட்டிக்கு போக மாட்டேன். நேராக சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போவேன். இதுவரை நீங்கள் யூ கொடுத்த படத்தை அவர்களுக்கு பட்டியல் போடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இதனால் பிரச்சினையை வளர்க்க விரும்பாத தணிக்கை குழுவினர் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.