விஜய் படத்தில் ஷாருக்கான்?

விஜய், அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல் படங்கள் வந்தன. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படத்தின் கதை கசிந்து விட்டதாகவும் சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யும், கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்குகின்றனர். ஒரு கட்டத்தில் கதிர் மர்மமாக கொல்லப்படுகிறார். கொலையாளிகளை கண்டுபிடிக்க விஜய் களம் இறங்குகிறார். அப்போது கொலைக்கு பின்னணியில் பெரிய சதி இருப்பது தெரிகிறது. வில்லன்களுடன் மோதி அழித்துவிட்டு கதிர் பயிற்சி அளித்த பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக மாறி கோப்பையை எப்படி வெல்ல வைக்கிறார் என்பது கதை என்று இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் என்ற பெயரில் அரங்கு அமைத்துள்ளனர். இதனால் ஷாருக்கான் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளிக்கு படம் வெளியாகிறது.